Wednesday, December 16, 2009

வாழ்வேன்...

சாவேன்...
உறுதி.
செத்த பின்பும்
வாழ்வேன்....
உறுதி.

Monday, November 23, 2009

இயல்பு

குடை ஓன்று
ஆசைப்பட்டது.....
வெயிலிலும்
மழையிலும்
நனையாமல்
இருக்க
மரம் ஓன்று
ஆசைப்பட்டது.....
நிழலில்
இருக்க
நிலவு
ஆசைப்பட்டது.....
நெருப்பில்
குளிக்க
விளக்கு
ஆசைப்பட்டது.....
இருட்டில்
இருக்க
மனிதனாக
இல்லாமல்
இருக்க
மனிதன்
ஆசைப்பட்டது.....
போல்.

Friday, October 30, 2009

அறிதலும்,உணர்தலும்......வாழ்தலும்....

முன்.....
வாசித்து அறிந்தேன்.
பின்....
வாசித்து உணர்ந்தேன்.
பின்னர்....
உணர்ந்து வாசித்தேன்.
பிறகு...
வாசித்து இருந்தேன்.
இனி...
வாழ வாசிப்பேன்...
எல்லோரும் போல
மறு ஜென்மம் ஒன்றில்...
மறுபடியும் மறுபடியும்.

Saturday, September 5, 2009

என்ன செய்யப் போகிறோம்.....

"என்ன செய்யப் போகிறாய்....?" கதாநாயகி கதாநாயகனை ஒரு மாதிரியா பாத்துக்கிட்டு பாடற பாட்டு. இதை வச்சுக்கிட்டுத்தான் இந்தத்தலைப்பையே என்னாலே யோசிக்க முடிஞ்சிச்சு. என்ன செய்யச் சொல்றீங்க....?

1932ல் பேச ஆரம்பிச்ச அந்த மாயப் பிசாசு செஞ்ச வேலை கொஞ்சமா நஞ்சமா? அதிலேயே ஊறப்போட்டு ஊறப்போட்டு, அப்புறம் அதிலேருந்து விடுபடணும்னு நினைச்சு என்னையே நானே நல்லா ஒதறி ஒதறி கம்பியிலே காயப் போட்டாலும், வாசம் போக மாட்டேங்குதே என்ன...பண்ண?
'பெட் லேன்ட்' 'பெட் லேன்ட்' ன்னு ஒருத்தரை கேள்விப் பட்டு இருக்கீங்களா? பாவம், தம் உள்ள ஆளு கோவனத்தைக் கட்டிக்கிட்டு தனி ஆளா நீச்சல் அடிச்சும், வத்தையிலே துடுப்பை வச்சுக்கிட்டு நாலு அஞ்சு பேரா ராமநாதபுறம் கடல் எல்லையிலிருந்து, ராமேஷ்வரத்திற்கு போய்க்கிட்டிருந்த நம்மளை 1914 ஆம் வருஷம் பிப்ரவரி மாசம் 24 ஆம் தேதி 'பாம்பன் ரயில்' பாலத்தை திறந்து வச்சு, நூறு இரநூறு பேரா ஒரே நேரத்தில் சௌரியமா ராமேஷ்வரத்திற்கு போக வச்ச பெரிய மனுஷன். அரசாங்க வேலையிலே சாதாரண குமாஸ்தாவா இருந்த ராமானுஜத்தை, ஸ்ரீ ராமானுஜத்தை கணித மேதை என்று அடையாளம் கண்டு இன பேதம் பார்க்காமல் மேல் படிப்புக்குக்காக அரசாங்க செலவில் லண்டன் அனுப்பி வச்ச பெருந்தன்மையான மனுஷன். பிரிட்டன் அரசிடம் போராடி அனுமதி பெற்று தன் காலத்தில் ஒரு ஜெர்மன் எஞ்சினியரைக் கூட்டிக்கிட்டு வந்து 600 பேரை வச்சிக்கிட்டு 2 வருசத்தில் அபாயகரமா அப்ப கருதப்பட்ட அந்த வேலையிலை ஒரு உயிர் சேதம் இல்லாமல் 20 லட்ச ரூபாய் செலவில் கட்டிமுடிச்ச மனுஷன். ஆச்சு, அஞ்சு வருஷம் போனா நூறு வருஷம் ஆச்சு. பிரபு பெட் லேன்ட். 'THE LORD PETLAND' 1912-1919 ல் சென்னை மாகாண கவர்னர் ஆக இருந்தவர். வேலை மெனக்கிட்டு இப்ப இவரை பத்தி பேச்சு எதுக்கு.

அவர் எழுதியதாக ஒரு சின்ன வரலாற்றுக் குறிப்பு:
"On the general poverty of the masses, Pentland remarked that laborers of Madras city had the habit of frequenting cinema halls to watch movies and suggested that this could be one of the possible reasons for their poverty.Pentland's statement also hints at the possibility of a drastic increase in the number of cinema goers during his Governorate."

எப்ப சொல்றாரு, 1919 ல். ஊமைப் படம் வந்த போது. படம் ஓடிக்கிட்டு இருக்கும், ஒரு ஆளு நீட்டக் கம்பா திரையிலே வச்சு வச்சு நடக்கிற சீனை கதாபாத்திரங்கள் சிரிக்கவேண்டிய நேரத்தில் சிரிச்சும், அழ வேண்டிய நேரத்தில்தொண்டை கிழிய அழுதும் விளக்கிக்கிட்டு இருந்தப்ப.

எனக்கு என்ன சந்தேகம்னா, ஒரு சின்ன விசயம்தான். பேசும் படம் வந்த பின் நல்லவனா நடிக்கிறவன் நல்லவன், கெட்டவனா நடிக்கிறவன் கெட்டவனாகத்தான் இருக்கமுடியும்னு ஒரு சைக்காலஜிகளா நம்ம பயலுகளே ஒரு அஞ்சாறு கோடி மக்களை நம்ப வைக்க முடியும்னு ஆதார பூர்வமாக நிரூபித்து காட்டியிருக்காங்கே. வெள்ளைக்கார பயலுக நரிப்பயலுக, அவைங்களுக்கு எப்படி இந்த யோசனை வராமப் போச்சு! அதுவும் 1919 லேயே நம்ம ஜாதகத்தை தெளிவா கணிச்சுட்டு. கொஞ்சம் ஏமாந்துட்டாய்ங்க. கடைசியா கவர்னர் ஜெனரலா இருந்தாரே அவர் பேரு கூட...ஆமாம் லார்ட் மௌன்ட்பேட்டன். முழுப்பேரு Louis Francis Albert Victor Nicholas Mountbatten,




ஆள் எப்படி. நம்ம ரஜினி மாதிரி இல்லை? அந்தம்மா பேரு எட்வினா மௌன்ட்பேட்டன். ஒரு கிரிமினலான யோசனை அந்த நரிப்பயலுகளுக்கு எப்படி அப்ப வராமப்போச்சு. அவைங்க ஒன்னு பண்ணி இருக்கலாம். நம்ம மௌன்ட்பேட்டனை ஹீரோவா நடிக்கவச்சு ரெண்டு படம் , ரெண்டே ரெண்டு படம் ரிலீஸ் பண்ணி இருக்கணும்.

அவரு இடது கையை கோட்டு பாக்கெட்டுக்குள்ளே வச்சுக்கிட்டு வலதுகை ஒன்னாலே மட்டும் நூறு நூத்தம்பது பேரை அடிச்சு துவம்சம் பண்ணி முடிச்ச ஜோர்லே "ஆப்பிரிக்காவில் இருந்துவந்து அடம் பிடிக்கும் அந்த அரை நிர்வாண பக்கிரியை அடித்து விரட்டுங்கள் நாட்டை விட்டு, அலறி ஓடடட்டும் ஆப்பிரிக்கா நாட்டுக்கே, நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"ன்னு சொல்லிக்கிட்டே நாலு விரலை உள்நோக்கி மடிச்சு வச்சுக்கிட்டு ஆட்காட்டி விரலை நட்ட குத்தலா நீட்டி வச்சுக்கிட்டு விசுக்குன்னு. ('விசுக்குன்னு' சத்தம் தியேட்டரே அலர்ற மாதிரி பேக் கிரவுண்டு மியூசிக் ரொம்ப முக்கியமான விஷயம்) உயர்த்தி ரெண்டு மூணு சீனு நடிச்சிருக்கணும்.

அப்புறம் அந்தம்மா லேடி மௌன்ட் பேட்டனை நம்ம பத்மினி மதுரை வீரன்லை கடைசீன்லை கதறி அழுகுமே, அதுமாதிரி அழவைச்சு "பார்த்தாயா மகனே பார்த்தாயா... இந்த பால் வடியும் முகத்தைப் பார்த்தாயா! கேட்டாயா மகனே கேட்டாயா! அந்த கேடு கெட்டவன் சொன்னதைக் கேட்டாயா! ஒத்துழையாமை இயக்கமாம், உப்பு சத்யா கிரகமாம் இன்னுமா உறங்குகிறாய்! எப்படியடா மகனே மயங்கி உறங்க உனக்கு மனது வந்தது! உன் நரம்பு முறுக் கேரவில்லையா நாடி துடிக்கவில்லையா எழு மகனே எழு, விழி மகனே விழி, புறப்படு மகனே புறப்படு அந்த துரோகியை துரத்துங்கள் ஆப்பிரிக்காவுக்கு" கண்ணை அகலமா வச்சுக்கிட்டு வீர வசனம் பேசி இருந்ததுன்னா அந்தம்மா ஈசியா நடிச்சிருக்கும். ஏன்னா, சினிமாவுக்கு வராமையே கிசு கிசுவில் சிக்கினம்மா.நேரு சிக்கிற சிப்பிலேயே தெரிஞ்சிக்கிலாமே. அந்த சினிமாவை காசு கருமத்தைப் பாக்காமே, இந்திய மொழி எல்லாத்துலையும் டப் பண்ணி அந்த நரிப் பயலுவ ரிலீஸ் பண்ணி இருந்திருக்கணும். நம்மளும் என்ன ஏதுன்னு தெரியாமையே தலைவரும் தலைவியும் சொல்றதும் சரிதான்னு சட்ன்னு ஒரு முடிவுக்கு வந்திருப்போம்.

அவங்க சொல்றதிலே என்ன தப்பு? அந்தாளும் ஆப்பிரிக்காவுக்குப் போய் ரொம்ப நாளா இருந்துட்டார்ல, திரும்பவும் போயிரவேண்டியதுதான்னு முடிவு பண்ணி பொங்கி எழுந்து ஒருவழியா அந்தப் பெரிய மனுசனை திரும்பவும் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வச்சிருப்போம். அவரும் ஒன்னு ரெண்டு வருஷம் கூட உயிர் வாழ்ந்திட்டு, நிம்மதியா செத்துபோய் இருப்பாரு. இப்ப வீனாவுளை ஐந்நூறு, ஆயிரத்தில கம்பை பிடிச்சிக்கிட்டு பொக்கை வாய்ச் சிரிப்பை பொய்யா பொழுதன்னைக்கும் சிரிச்சிக்கிட்டு, நம்ம படம் போட்ட நோட்டை பாவிப் பயலுக எது எதுக்கோ பயன் படுத்துராய்கலேன்னு வெந்து நொந்து போய் அவருடைய ஆத்மா தினம் தினம் செத்து போய்க்கொண்டிருக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்காது. நமக்கும், அவைங்கலே இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் லேசு லேசா வந்துக்கிட்டு இருக்கே, அதுவும் வந்து தொலைச்சிருக்காது. நரிப் பயலுக இந்த விசயத்திலே எப்படியோ கொஞ்சம் ஏமாந்திட்டாய்ங்க.

இப்ப இந்தியா எப்படி இருக்கு? நம்ம எப்படி இருக்கோம்? எந்த நிலையிலே இருக்கோம்?

ஸ்ரீ ரமேஷ்ன்னு ஒரு சின்னப் பையன். வயசு 25 க்குள்ளே இருக்கும். இப்ப நம்மெல்லாம் கதை, கவிதை, கட்டுரைன்னு சந்தோசமா இருக்க சமயத்திலே அந்த பையன் தன் வாழ்வில், என்ன பெரிய வாழ்வு 25 வயசு வாழ்வு, ஏற்பட்ட வாழ்வியல் சம்பவத்தை, மரண தைரியத்தோடு எதிர்கொண்ட விதத்தை தன் பிளாக்கில் பதிந்துள்ளான். ஒரு முறை, ஒரே ஒரு முறை முழுசா கடைசி வரைக்கும் படிங்க. படிச்சு முடிச்சதும் சுண்டு விரலில் இருக்கும் ரத்தம் உங்க தலைக்கு ஏறலைன்னா தைரியமா ஒரு முடிவெடுத்து மன நல வைத்தியரை அணுகி மருந்து கிருந்து எடுத்திக்கிறது நல்லது.

அந்த பையனுக்கு வந்ததே அது என்ன? நம்மளை பொறுத்த வரைக்கும் அது விபரீத எண்ணம். ஏதாவது ஒரு மாற்றம் வரணும்னா அந்த பையனுக்கு வந்ததே விபரீத எண்ணம் அந்த தைரியம்....
"ரொம்ப வேணாம்யா ரொம்ப வேணாம், நூத்திலே ஒரு பங்கு நமக்கெல்லாம் வரணும்யா!" இதை நம்ம மனோரமா ஆச்சி சொல்றமாதிரி மனசுக்குள்ளே ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொல்லிபார்த்துக்கிட்டேங்கன்
னா, அப்பத்தான் வழக்கமா பழகிப்போன நம்ம மனசுக்கு அந்த வார்த்தைகளோட எபெக்ட் புரிய ஆரம்பிக்கும்.

என்ன செய்யப் போகிறோம்? என்ன செய்யலாம்?

மதத்துக்கு ஒரு சாமியா சிவன், இயேசு, அல்லா, இந்துக்கள்ளே குட்டி தெய்வங்கள் ஜாஸ்தி. சமீபத்தில் என் மனதை ஈர்த்த, சமுதாயத்தில். புரையோடிப்போன சில மனக் குப்பைகளை சில கவிதைகளில் சந்திக்கு இழுத்து வந்து நிறுத்தும் நவீனக் கவிஞன் 'குமார்ஜி' சொல்கின்ற குட்டி தெய்வங்கள்,

"சுடலை மாடன் இசக்கி பேச்சி
பிரம்ம சக்தி முண்டன் முனியன்
உச்சி மாகாளி மாரியம்மன்
வடக்கு வாசிசெல்வி பத்ரகாளி
முத்தாரம்மன் பூதத்தான் சங்கிலி
இன்னபிற பெயரில்லாப்
பூடங்களும் ...."

ஆகிய இன்ன பிறவற்றை ஆஸ்திகராக இருந்தால் ஒவ்வொருத்தரும், என்னையும் சேர்த்துத்தான் மனசுக்குள்ளை நினைச்சுக்
கிட்டு
"அந்த சின்னப் பையனான ஸ்ரீ ரமேசுக்கு வந்த விபரீத எண்ணம் எனக்கும், என் குடும்பத்தை சேர்ந்த எல்லோரையும் தவிர வேறு எவனுக்காவது வரணும்”னு வேண்டிக்கிரனும்.

நாத்திகராக இருந்தால் காலேஜ், காம்ப்லெக்ஸ், கல்யாண மண்டபங்களோட நம்ம கொள்கையை நிறைவேத்தியாச்சுன்னு திருப்தி அடைந்து "இயற்கை நியதிப்படி மாற்றங்கள்தானே மாறாதது மாற்றம் வந்துதானே தீர வேண்டும்" அப்டின்னு காசு சம்பாதிப்பதற்கு என்னென்ன வழியெல்லாம் இருக்கோ அதையெல்லாம் யோசித்து முடித்துவிட்டு மீதி நேரம் ஞாபகம் இருந்தா, நம்ம சமுதாயம் எப்படி இருக்குன்னு நினைச்சுக்கிட்டே தூங்கிரனும்.

இப்படி வேண்டிக்கிட்டும் நினைச்சுக்கிட்டும் அவுக அவுக பொண்டு, புள்ளைங்க, குடும்பம், கோத்திரம், வீடு, வாசல், வயல், வரப்பு, தோட்டம், தொறவு, மாடு, கண்டு, கோழி,குஞ்சு, வேலை, வெட்டி... இவைகளை சேமமாக பார்த்துக்கொண்டே வெந்ததைத் தின்னு விதி வந்தா செத்துப் போவோம். விடிவு காலம்னு ஒன்னு அதா வராமலா போய்விடும்?

கதை, கவிதை, கட்டுரை, பின்னூடங்கள் ஏனைய பிறவற்றை எல்லாம் எழுதி முடித்துவிட்டு நேரம் கிடைக்கும் போது கீழே உள்
ள தொடர்புச் சங்கிலிக்குள் இருக்கும் அந்த சின்னப் பையனின் விபரீத
எண்ணத்தை:

"சாலை ஓரத்திலே..
சில வேலை அற்றதுகள்...
வேலை அற்றதுகளின்...
நெஞ்சிலே......
சில விபரீத..எண்ணங்கள்..
வேந்தே...!
அது....காலனின்...குறி!"

அண்ணா சொன்னாரே, அந்த விபரீத எண்ணத்தை தற்போது சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வியல் சம்பவங்களில் ஒன்றை படித்துப் பாருங்கள். ஒரு வேளை அந்தப் பையன்,

"DO THE THING
YOU FEAR.
AND THE DEATH OF
FEAR IS CERTAIN."

என்ற நார்மன் வின்சென்ட் பீலின் வாசகங்களைப் படித்தி
ருப்பானோ தெரியவில்லை.

"மனச்சாட்சி உறங்கும் போது...
மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.."

இப்ப எனக்கு டேர்ன் மாறி இருக்கு. மனக்குரங்கு உறங்குகிறது. மனச்சாட்
சி ஊர் சுற்றக் கிளம்பியுள்ளது ஸ்ரீ ரமேசால். தொடர்புச் சங்கிலி: http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html

இந்த தொடர்புச் சங்கிலியை உங்கள் நண்பர்களுக்
கும் உறவினர்களுக்கும்
அனுப்பி வையுங்கள். அட, ஒன்னு ரெண்டு பேருக்காகவாவது மனச்
சாட்சி ஊர் சுற்ற கிளம்பாமலா போய் விடும், பார்க்கலாம்.

Monday, August 17, 2009

தொடக்கப்பள்ளி


கருவேல நிழலில், பதிவர் பா.ரா. ஒரு தொடக்கப்பள்ளியின் படத்தை வெளியிட்டு, அதற்கு ஒரு கவிதையும் எழுதக் கேட்டிருந்தார். என்னாலான ஒரு முயற்சி கீழே... [படம் - கருவேல நிழல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. உபயோகப்படுத்த அனுமதித்த பா.ரா. அவருக்கு நன்றிகள்!]

புளியங்கொட்டையில்
ஒன்னயும் ரெண்டையும்...
உயிரையும் மெய்யையும்..
உண்டாக்கி காட்டிய..
புஷ்பவள்ளி டீச்சரிலிருந்து..
'சிவகாசி செல்வராசு வாத்தி...
சீதா லட்சுமி..
முத்து லட்சமி..
ஐந்தாவதில் சொல்லவைத்து
இருபது வயது வரை..
'இயேசு அறிய..'
உண்மை சொல்லும் போதெல்லாம்
சொல்ல வைத்த...
ஞானப்பிரகாசம்...
காதல் மன்னன் கதிர்வேலு...
கூத்தான்டான் குரங்கு வாத்தி..
"என் சிந்தை நோயும் தீருமோ"
மறக்கவே முடியாத...மருதகாசி
பாட்டு மெட்டில்....
"மேலான தெய்வம் தாயடா..
உண்மைக் கோவில் அவளடா..
பாராட்டினாள் சீராட்டினாள்..
உண்மை அன்பை ஊட்டினாள்..."
பாட்டமைத்து..நாடகம் நடத்தி
பாதியிலே..பறந்து சென்ற ஜான் வாத்தி..
சுடுமூஞ்சி..சுப்பய்யா...
ஒல்லி வாத்தி...உலகநாதன்..
கம்யூனிஸ்ட் ஷண்முகம்...
"சட்டிப்பீ..தின்பே..
ஓ வாயிலே..தர்ப்பைப்
புல்லை போட்டு பொசுக்க"
பதில் வராத போதெல்லாம்..
பண்புடன் சொல்லும் ராமுடு..
"அடுத்தவனைக் கெடுத்தவன்.."
வருகைப் பதிவேட்டை..
வாசிக்கும்போது..
அடுத்த பெயரை..அழைக்க..
அழகுடன்..வாசிக்கும்...
ஆரோக்கிய சாமி...
வழுக்கை தலை..வருதுடோ..
சூனாக்கீனா..சு.கிருஷ்ணமூர்த்தி...
அழகான ஹிந்தி டீச்சர்...
(பெயர்..எப்படி மறந்தேன்)
அனுமார் கோவிலில் சந்தித்து
அம்பலமான கிசு கிசுவில்..
அகப்பட்ட 7E...ரங்கராஜன்...
தொந்தி ஜெயராமன்...
ஒயிட் அன்ட் ஒயிட்..
பாஸ்கர சேதுபதி...
தஸ் புஷ்..தஸ்தகீர்..
சீனியாரிடி செய்த வினையால்
பிசிகல் டைரெக்டர் ஆன..
ஓமக்குச்சி சைஸ்
'பயில்வான்' ஆறுமுகம்..
'மண்ணாங்கட்டி'மரியஜெகம்...
'நீக்ரோ'நீலமேகம்...
'கிட்டி'கிருஷ்ணமூர்த்தி..
'மொரட்டு'முத்துக் குமார்..
'கலாட்டா' கருப்பையா
ஆசிரியராக அறிமுகமாகி...
திறமையால்..மேஜராகி
சைனாப் போரில் காலமாகி...
மறக்கவே முடியாத..
'வெள்ளை' சே ஷாத்ரி
'செவிட்டு' சே ஷாத்ரி
மோதிரத்தை திருப்பி வைத்தாலே...
அரை வாங்க தயார்நிலையில்..
'கரடி'சே ஷாத்ரி....
"ஹாரப்பாவைப் பாரப்பா..
நாகரீகத்திற்கு முன்னோடி..
நாங்கப்பா..மறுக்க முடியுமா..
'உலக' ப்பா...."
சரித்திரம் நடத்தும்போது
சிதறிவிட்ட...'குட்டை' நாகராஜன்...
'வானம்பாடி' படத்தை..பார்த்து
'கங்கைகரைத்..தோட்டத்தை'
கட்டைக்குரலில் பாடி...
கதறடித்த..மொக்கைப் பிச்சை..
ஆறு பிள்ளைகள் அடுத்தடுத்து
'அஞ்சலியாகப்' பிறந்தாலும்
காவி வேட்டி...தும்பைப் பூ சட்டை
துவைக்க மட்டுமே முடிந்த ...
தூய்மையான ..அங்கவஸ்திரம்..
துயரம்..தெரியாமல்..
தொங்கியே நிற்கும் தூய்மையான
புன்சிரிப்பு..தகர்க்கவே முடியாத
தட்சிணா மூர்த்தி புலவர்...
"என் மாதிரி இருப்பாரா
பாரதிதாசன்?"
பட்டை மீசையுடன்
புரியாத பார்வையுடன்
புலவர் இளங்கோ..
தனக்கும் புரியாமால்..
எங்களுக்கும்..புரியாமால்
கணக்கெடுத்து..பதற வைத்த
கட்டைக் குரல் பழனி...
பொறுக்க முடியாமால்...போராடி
மாற்றி...அல்ஜீப்ராவை...அறிய
வைத்த...சம்மர் கிராப் சந்திர சேகர்...
"என்னப்பா..எப்படி இருக்கே.."
தொண்ணுத்தெட்டு வயதிலும்...
தொய்வறியா நெட்டை
வரதராஜக் கோன்....
"தெள்ளிய தேனில்..
சிறிதொரு நஞ்சையும்...
சேர்த்த பின் தேனாமோ!
நன்னெஞ்சே!
சேர்த்த பின் தேனாமோ?"
பாரதியே வந்து நின்னு...
கடவுளை வாழ்த்தும்..
கோட்டு வேட்டி...
கண்ணுசாமி....
"தொண்டான்" என்றாலே...
தொடையெல்லாம்..
நடு நடுங்கும்....
வெங்கலக் குரலுடையோன்
வெட வெடத்த
வெங்கடகிருஷ்ணன்
காலை மாலை..கணீர் குரலில்
தங்கத் தமிழை பன்னீராக
வெளியே தெளித்து
ஆறுமணிக்கு..தண்ணியை..
உள்ளே தெளித்து..
சிவன்கோவில் வாசலிலே..
உள்ளே போனால் ஆச்சாரம்
போய் விடுமாம்...
'தண்ணி'வாசம்...சாமிக்கு..
தெரிஞ்சுடுமாம்....
கழுத்தில் கலர் கலர் துண்டுடன்..
கர்நாடக இசையில்...
கலங்கடிக்கும் வேதைய்யா...
கோல்ட் பிளேக் சிகரெட்டை..
அரைமணிக்கு ஒன்றாக..
அடிக்கின்ற..அனந்தகிருஷ்ணன்..
மலங்க..மலங்க முழிப்பதால்
'மலங்கன்'மதனகோபால்
கதை சொல்ல மாட்டாரா...
காலமெல்லாம்...
ஏங்கவைத்த ராமைய்யா
"தண்ணியில்லாமல் நெல்லு வெலைய
வழியொன்று காண வேணும்..
அப்பவே சொன்ன.....
அய்யா மாதிரி....
கையடக்கப் பெட்டியில்....
கனதூரம்...பேசவேணும்..."
காணும் போதெல்லாம்
சொல்லும்....
வெள்ளைக் கோட்டு சூட்டு...
வெங்காயப் பிரியனான..
பெரியாரின் பிரியன்...
நல்லதைத்தவிர வேறொன்றும் அறியா..
தலைமை வாத்தி...
நாராயணன் சேர்வை...
தொலைக்க முடியாத பெயர்கள்..
தொடக்கப் பள்ளி என்றதும்....
பள்ளி இறுதிவரை...
தொடர்ந்து....
நினைவில் வந்து.....
தூக்கத்தை
தொலைத்த பெயர்கள்.............................................
வாசலில் என்ன சத்தம்.....
ஓ! வந்தது நீதானா!
எத்தனை முறை...
சொல்வதுனக்கு...
வேண்டாம் வேண்டாம் என்றால்...
விளங்காதா உனக்கு.....
மறுபடியும்..சொல்கிறேன் கேள்...
மடி நிறைய பணம்.... வேண்டாம்...
மாட மாளிகை............ வேண்டாம்...
கூட கோபுரம்..............வேண்டாம்..
மனைவி மக்கள் ........வேண்டாம்...
மறுபடியும் என்னை...
ஒரு முறை...
ஒரே ஒருமுறை.... இவர்களுக்கு..
மாணவனாக்க முடியுமா....
சொல்...
முடியுமென்றால்....
காணிக்கை பேரம்....கலந்து பேசி
முடிவு செய்வோம்.....
முடியாதென்றால்....
வாசலில் நின்று
வம்பேதும்...பண்ணாதே....
வெளியில்....
வேலையிருக்கு...
சற்றே...விலகி ...நில்
சர்வேசா!

Monday, June 29, 2009

கொள்ளிவாய் பிசாசும்....கிறித்துவ சுடுகாடும்



குறிப்பு: "கொள்ளிவாய் பிசாசும்....கிறித்துவ சுடுகாடும்" ஆயிரம் வார்த்தைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக சுருக்கி வெளியிடப் பட்டது. சுருக்குவதற்கு முன் நான் விரிவாக எழுதி இருந்ததை கீழே கொடுத்துள்ளேன்

சின்ன வயதில் நான் ரொம்பப் பயந்தவன். இப்ப என்ன வாழுது.அறுபது வயதிலும் அப்படித்தான்.தெனாலியில் கமலுக்கு மாதிரி எல்லாவற்றிலும் பயம்.சின்ன வயதில் நான் பயந்ததற்கான காரணங்களைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். மதுரை மேலாவாணி மூல வீதிதான் எங்களுக்கு பூர்வீகம். இந்தகடசியிலிருந்து அந்தக்கடசிவரை வீடுகளுடன் வாழ்ந்ததாக பெருசுகள் சொல்வார்கள். எப்பவாவது அந்தப்பக்கம் போகும் போது இன்னும் சிதலம் மாறாமல் அப்படியே இருக்கும் அந்த பெரிய வீட்டை "உள்ளே நுழைந்து தாவாரத்தை தாண்டியவுடன் பெரிய ஹாலு, அதிலேதேக்கு ஊஞ்சல்லை ஆடிக்கிட்டே மாமனாரு வெத்திலை பாக்கை இடிச்சு போட்டுக்கிட்டிருப்பாரு. உங்க அப்பா முதக்கொண்டு கையிலே துண்டை மடிச்சு போட்டுக்கிட்டு நிப்பாக. எப்படியாவது அந்த வீட்டை வாங்கிடனுப்பா.வாங்கின செட்டியாரு வாக்கு தவறாத பெரிய மனுசனப்பா.எப்ப வந்து உன் வாரிசு யார் கேட்டாலும் நியாமான விலையை கொடுத்திட்டு எடுதுக்கிரட்டும் பொன்னுசாமின்னு சொன்னாருப்பா " என்று மாமனாரின் பெயரை சொல்லும் போதெல்லாம் ஒருவிதமான பதட்டத்துடன் 94 வயது வரை சொல்லிக்கொண்டிருந்த எங்க அம்மாவையும், உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்த செட்டியாரையும் நினைத்த படியே கடந்து செல்வேன். அண்ணன்கள் அக்காக்கள் பிறப்பதற்கு முன்னரே அப்பாவின் வேலை மாற்றத்தினால் அம்மாவழி தாத்தாவின் கிராமத்திற்கு மாற்றி வந்து விட்டோமாம்.அங்குதான் நான் பிறந்தேனாம்.


நான் பிறந்த ஊர் சின்ன கிராமம்தான். பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தது கிராமத்திலும் ரெண்டு கி.மீ.தூரத்திலிருந்த டவுனுலிம்தான். சுவாரஸ்யமாகவும் சி.டி.யிலும், டி.வி.யிலும் ரீவைன்ட் பண்ணி பார்க்கிறோமே அதுமாதிரி முடிந்தால் உடனடியாக பார்க்கத்துடிக்கும் அற்புதமான காலமது.ஒருவேளை இப்பொழுது நடப்பதை ஒரு பத்து வருடம் கழித்து நினைத்து ஏங்குமோ மனசு, தெரியவில்லை.இயல்பாக கிடைப்பதுதான் மனசுக்கு எப்பவுமே பிடிக்காதே.

எட்டாவது ஒன்பதாவது படிக்கும் வரை பகலில் தைரியமாக டவுன் வரை போய் வந்துருவேன். பஸ்ஸோ, வாகனவசதியோ இல்லாத காலமது.நடந்துதான் செல்லவேண்டும். இருட்டுவதற்குள் வீடுவந்து சேர்ந்துவிடுவேன்.பொழுதடைந்து மச,மசன்னு இருள்சூழ ஆரம்பிக்கும்போது என்மனதிலும் பொந்திற்குள் நுழையும் பாம்பு போல மெது மெதுவா பயமும் புகுந்து விடும். இப்பொழுது மாதிரி பாத் ரூம் வசதி இல்லாத காலமது. அவசரகாரியங்களுக்கு கண்மாய் கரைக்குத்தான் செல்ல வேண்டும். பகலில் ஆள் நடமாட்டம் ஒன்னு ரெண்டு இருப்பதால் பகலில் தைரியமா தனியே சென்று வென்று வந்துருவேன். இரவானால் சிரமம். அண்ணனோ,அக்காவோ தம்பியோ, தங்கச்சியோ குறைந்தபட்சம் ஒருவராவது கூடவரனும். இருபது முப்பதடி தூரத்தில் அவர்களை நிறுத்திவிட்டு அவர்கள் எனக்கு தெரிகிறமாதிரியும், நான் அவர்களுக்கு தெரியாத மாதிரியுமான 'டெக்னிக்கலான' ஒரு இடத்திலிருந்து போய் வந்துருவேன்.


எங்க ஊர் எல்கையில் ஒத்தையா ஒரு பிள்ளையார் கோவில். பூசாரி யாரும் கிடையாது. ஆனாலும் பிள்ளையார் சந்தோசமா இருக்கிற மாதிரிதான் தோணும். இரவு ஏழு மணிக்கெல்லாம் கிளியாஞ்சட்டியில் விளக்கு மினுக், மினுக்குன்னு எரிய ஆரம்பிச்சுரும். நாள் தவறாமல் பிள்ளையாரை சந்தோசப்படுத்த அழகக்காவால் செய்யப்படும் கைங்கரியம். காதலிக்க நேரமில்லை படத்தை நான் பார்ப்பதற்கு முன்னர் மதுரையில் சென்ட்ரல் தியேட்டரில் பார்த்த துர்க்கா ஆறுமுகத்தால் நாகேஷ் பாலையாவிற்கு கதை சொன்னதை வரிமாறாமல், பாவம் மாறாமல் சொன்னதும் வயிறு வலிக்க நான் சிரித்ததும் அந்த கோயில் வாசலில்தான். சைடில் பெரிய பொட்டல். அந்த பொட்டலில் நான், பின்னாளில் டைரெக்டர் ஆப் மெடிகல் சர்வீஸ் ஆகப்போகிற நாகநாதன், புதுக்கோட்டையில் பேராசிரியராக பணிபுரியப்போகிற சேது ராமலிங்கம், அந்தக்காலத்திலியே துபாய் போய் சம்பாதித்து மூணு நாலு முறை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் அதிக டெபாசிட் போட்டதற்கான பரிசு வாங்கிய சுவடு எதுவும் தெரியாமல் பொழுதுபோக பழைய சின்ன சலூன் கடையை திரும்பவும் ஆரம்பித்து பார்க்கும் போதெல்லாம் அதே பாந்தத்துடன் சிரிக்கப்போகும் பாலுசாமி பூக்கடை வைத்து இப்ப பார்த்தாலும் 'போலீஸ்....' என்றுதொண்டை கிழிய கத்தபோகும் கணபதிராமன் எல்லோரும் சேர்ந்து விளையாடியது அந்த பொட்டலில்தான்.அவன் கத்துவதற்கான அர்த்தத்தை நாங்கள் இருவர் மட்டும்தான் புரிந்துகொண்டோம் என்பதற்கு அடையாளம் எங்களிடையே போய் வரும் சின்ன சிரிப்புதான். அவன் சைக்கிள் ஓட்ட கத்து குடுத்து 'முதுகை வளைக்காதே ...முதுகை வளைக்காதே' ன்னு அடிச்சிக்கிட்டே சைடில் ஓடி வரும்போது எதறக்க காக்கி டிரஸ் போட்டு வந்த பேங்க் வாட்ச் மேனை போலீஸ் என்று பயந்து நான் தலை குப்புற விழுந்ததை 52 வருசமா மறக்க அவனாலும் முடியலை.என்னாலும் முடியலை.


பம்பரம், கிட்டிபுள், பேந்தா, குதிரை சில்,சிங்கி, செதுக்கு முத்து, பச்சைக்குதிரை, அத்திலி, புத்திலி, மக்கான், சுக்கான், பால், பறங்கி, லாட்டுமே, லூட்டுமை, சீ, சல்'ன்னு பத்தாவதாக ' சல்' வருபவன் கண்ணை பொத்திக்கொள்ள மற்றவைங்க ஓடி ஒளிந்து கொள்வது, நொண்டி, கபடி இப்படி பல விளையாட்டு விளாடுவோம்.ஜெயிக்கிறவனுக்கு சந்தோசம், தோக்கிரவனுக்கு சங்கடம். இந்த ரெண்டு உணர்ச்சிதான் எங்களுக்கு தெரியும். யாரு என்ன சாதி.என்ன மதம் ஒரு எழவும் தெரியாது. அம்மா யாரையாவது அண்ணேன்னு கூப்பிட்டா மாமான்னு மொறைவச்சு கூப்பிடுவோம். ஐத்தைன்னு கூப்பிட்டா அப்பத்தான்னு கூப்பிடத்தான் பழகிருந்தோம். இப்ப இருக்கிற சிறுசுகளுக்கு நடிகர் விஜியின் புண்ணியத்திலே கபடி பிரபலமாகிவிட்டது வேறு விளையாட்டை தெரியாது. இப்போ பெரிய முன்னேற்றம் என்னான்னா, கிராமத்தில் கிரிக்கெட் விளையாடறாங்க. ஜாதிக்கு ஒரு பொட்டல்ன்னு, நாலைந்து பொட்டலில் தனித்தனியாக. அரசியல்வாதிகளின் பகுத்தறிவால் ஏற்பட்ட வேறு மாதிரியான விபரீத பரிணாம வளர்ச்சி. கணபதி ராமன் யாருடன் விளையாட பிரியப்படுரானோ இல்லையோ என்னுடன் விளையாட ரொம்ப பிரியப்படுவான். குண்டோ பம்பரமோ நான் ஜெயத்திருந்தாலும் அதட்டிஅவன் ஜெயித்ததாக சொல்லி வாங்கி சென்று விடுவான்.எனது பயத்தை பற்றிய விஷயம் அவனுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது.


சந்தோஷ பிள்ளையாரைத் தாண்டினால் டவுன் ஆஸ்பத்திரி முக்குவரை ஆள் அரவம் இருக்காது. இப்ப ரோட்டைத்தவிர இண்டு இடுக்கெல்லாம் மூச்சு முட்ட முட்ட வீடுகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. அப்ப இடைப்பட்ட தூரத்தில் இந்தப்பக்கம் ஒரு ஆறேழு புளியமரம். ஒரே ஒரு ஆலமரம். ஒரு பனை மரம். அந்த பக்கம் ஐந்தாறு புளிய மரம். ஒரு புங்க மரம் எல்லாம் போய் பாலத்துக்கு இந்த பக்கம் ஒருபுளியமரம். அந்தப்பக்கம் ஒரு புளியமரம். உனக்கு நான் துணை.எனக்கு நீ துணைன்னு. அவைகளைக் கடக்கும் போது ரொம்ப நாள் கழித்து பாக்கிற உறவினர்களை பார்க்கிற சந்தோஷமும்,பெரு மூச்சும் அடி நெஞ்சில் லேசான வலியும் உணர முடிகிறது.


முக்கியமான விஷயம் என்னான்னா, கிராமத்திலிருந்து ஒன்னாவது கிலோ மீட்டர்லே ஒரு கிறித்துவ சுடுகாடு. அதிலே புதைக்க மட்டும் செய்வதினால் அதிலே எனக்கு பயம் கொஞ்சம் கம்மி. அடுத்தாற்போல் இந்துக்களை எரிக்கவும், புதைப்பதற்குமான சுடுகாடு இருக்கு.

மாசத்துக்கு ஒன்னோ ரெண்டோ எரிஞ்சிட்டிருக்கும். பத்தாதுக்கு அதான் கொள்ளி வாய்ப்பிசாசுன்னு எங்க காலத்து பெருசுகள் சொல்லி வைத்திருந்தாயிங்க. பகல்ன்னாலும் சரி, இரவானாலும் சரி துணையோடு வந்தாலும் ரெண்டையும் ரொம்ப அவஸ்தையோடுதான் கடந்து போவேன். ரெண்டு சுடுகாடுகளின் வாசல்லை எலக்ட்ரிக் போஸ்ட். குண்டு பல்ப் ரெண்டும் ஒத்தை ஒத்தையா ''என்னால் இவ்ளோதான் முடியும்.முடிஞ்சா பார்த்து போய்க்கோன்னு" ராத்ரியிலே வீம்பா தொங்கிட்டிருக்கும். நிலாகாலங்கல்லை பயம் பயம்தான்.இருந்தாலும் கொஞ்சம் பரவால்லை. மற்றைய காலங்களில் குண்டு பல்ப் அண்ணாச்சிகளை தாண்டினால் கும்மிருட்டுத்தான். உத்தேச நடையோடுதான் வீடு வந்து சேர முடியும். சாயந்திரம் ஆறுமணிவரை டவுனிலிருந்து ரெண்டு சுடுகாட்டையும் திக்கி திணறி கடந்து வந்து விடுவேன். அதுக்கு மேலன்னா ஆஸ்பத்ரி முக்குலே வந்து நிப்பேன். ஆணோ, பொண்ணோ யாராவது வர்றாங்களான்னு பாப்பேன். கண்ணில் தட்டு பட்டுவிட்டால் பரீட்சை சமயத்திற்கு மட்டும்தான் திறப்பேன்னு சத்யம் பண்ணியதை மீறி புத்தகத்தை திறந்து ஆழ்ந்து படிப்பது போல் அவர்கள் என்னை கடக்கும் நேரத்தை லேசான சைடு பார்வையால் கவனித்து கொண்டிருப்பேன். முப்பதடி தூரத்தை தாண்டியதும் எதார்த்தமாக வருவது போல் பின்தொடர்ந்து சுடுகாடுகளைக்கடக்கும் போது எதிர் திசையில் முகத்தை வைத்துக்கொண்டு ஊர் வந்து சேர்ந்து விடுவேன். சுடுகாடுகளைக்கடக்கும் போது பெரு மூச்சு ஓன்று வரும்.அந்த நேரத்தில் ஏற்படற சந்தோசத்தை எழுத்துக்களில் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.

ஒரு சமயம் டிகிரி ரெண்டாம் வருஷம் படிக்கும்போது டவுனிலிருந்த சித்தப்பா தவறி விட்டார் .அறுபது வயதுதான். சாகக்கூடிய வயசில்லைதான். ஊர் உலகத்திலிருந்து சொந்தங்களின் கூட்டம். அழுது புரண்டார்கள். மாரில் மாறி, மாறி அடித்துக்கொண்ட பெண்கள் கூட்டம். பார்க்க, பார்க்க எனக்கும் அழுகை வந்துவிட்டது. ராத்திரி ஒன்பது மணியாகி விட்டது. உறவுகளின் கூட்டத்தால் சித்தப்பா வீட்டில் படுக்க இடமில்லை. சைக்கிளில் வீடு திரும்ப முடிவு செய்து நம்ம பேவரைட் ஆஸ்பத்ரி முக்கு வரை வந்து விட்டேன். சைக்கிள் செயின் கழண்டுவிட்டது போல் கையால் பெடலை சும்மா சுத்துநேனே தவிர கவனமெல்லாம் யாராவது வருகிறார்களா என்பதிலேதான் இருந்தது. ரொம்ப நேரம் பார்த்தேன். ஒரு சுடுகுஞ்சியும் காணவில்லை. இனி வேலைக்காகாதுன்னு முடிவு செய்து செகண்ட் சோ பார்த்து விட்டு கிராமத்திற்கு திரும்புவதை அப்புறம் முடிவு செய்யலாம்ன்னு டவுன்னில் இருக்கும் தியேட்டர் வரை வந்து விட்டேன்.சொந்தக்காரைங்க யாராவது பார்த்தால் காறி துப்பி விடுவார்களோன்னு பயம் வேறே. நல்லா ஞாபகம் இருக்கு. இருமலர்கள்-சிவாஜி, பத்மினி, சரோஜாதேவி நடித்தது. பெல் அடிக்கும் வரை காத்திருந்தேன். 30 பைசா, 46 பைசா, 75 பைசா, ரூ.1.25 இப்படி தியட்டரில் நாலு வகுப்பு. மத்ததெல்லாம் ஏதோ நியாயம்.அதென்ன 46 பைசா. தெரிந்தவர்கள் சொன்னால் ரொம்ப நாள் பிரச்சனைக்கு எனக்கொரு முடிவு கிடைக்கும். அய்யா அப்ப காலேஜில் படிப்பதால் முதல் வகுப்பிற்கு குறைந்து போவதில்லை. கடைசி வகுப்பில் இருப்பதால் முன்னாள் இருக்கும் வகுப்பில் இருப்பவர்கள் லேசு வாசாகத்தெரிந்தார்கள். கூர்ந்து பார்த்தேன். கேதத்துக்கு வந்திருந்த ஆணு,பொண்ணு பாதிப்பேரு அங்கதான் இருந்தாங்கே. காலம்தான் மனப் புண்ணை ஆற்றும் என்று கேள்வி பட்டிருக்கேன். ஒரு ஆறுமணி நேரத்திற்கே அவ்வளவு பவர் இருந்ததையும், சித்தப்பா பாதி தூரம் போவதற்குள்ளேயே இப்படி ஆத்தும் என்பதையும் என்னால் நம்பத்தான் முடியவில்லை. ஒருத்தனுக்கும் தெரியாமல் படம் பார்க்காமல் சைககிளை எடுத்துக்கொண்டு கேத வீட்டில் இருந்த அம்மாவிடம் சென்று பின்னால் உட்கார்ந்து கொள்ளுங்கள் வீட்டிற்கு ரெண்டு பேரும் போய் விடுவோம்ன்னுசொன்ன போது சொந்தங்க தப்பா நினைப்பார்கலப்பா; நீன்னா போப்பான்னு சொன்னபோது தியேட்டரில் பார்த்ததை சொல்ல ஏனோ மனம் வரவில்லை. வெக்கத்தை விட்டு சுடுகாட்டை தாண்டிபோக முடியாத எனது இயலாமையை அம்மாவிடம் அப்பொழுதுதான் சொன்னேன். என்னை ஒரு பார்வை பார்த்தார்கள்.அதில் இரக்கம் இருந்ததா,கோபம் இருந்ததா வருத்தம் இருந்ததா சரியாக தெரியவில்லை.


அடுத்தநாள் அதி காலையில் என்னை எழுப்பி வீட்டிற்கு கூட்டி வந்து தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி ஈரத்துண்டுடன் வீட்டில் இருந்த கோயில் வீட்டிற்க்குள் போகாமல் வாசல் படியில் நிறுத்தி நாலு இஞ்சுக்கு நாலு இஞ்சு அளவுள்ள ஒரு வெல்வெட் கலர் சின்ன பெட்டியை கொடுத்தார்கள். குறுக்கேயும் நெடுக்கேயும் கருப்பு கயிறால் கட்டப்பட்டிருந்தது. 'சாமியை கும்பிட்டு பையில் வைத்து கொள் .காத்து கருப்பு உன்னை அண்டாது' என்றார்கள்.

எங்க அம்மா கிராமத்து மனுசிதான். பாதி வைத்தியர். கிராமத்து சிறுகுழந்தைகளுக்கு ஏராளமான வயிற்று உபாதைகள், சீதள நோய் பசியின்மையை போக்கியவர். பரோபகாரி. அப்பாவின் மதி மற்றும் நிதி மந்திரி. அம்மாவை குளிப்பாட்டி வைத்திருக்கும் போது பெரிய மாலையை போட்டு 'பஞ்ச காலத்திலே எம் பிள்ளைகளுக்கெல்லாம் பிள்ளை சோறு கொடுத்த தெய்வமப்பா'ன்னு மாணிக்க தேவர் அழுது சொன்னதை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை.


அம்மா கொடுத்த வெல்வெட் பெட்டியை பையில் வைத்து கொண்டு நான் முதலில் விளையாட கூப்பிட்டது கணபதி ராமனைத்தான். குண்டு, பம்பரம் இத்யாதிலிருந்து நாங்கள் டென்னி கேட்டுக்கு மாறி இருந்தோம். அது நான் கொஞ்சம் நல்லா விளாடுவேன். ஓங்கி நான் கட் அடிக்கும் போது தரையில் விழறதுக்கு முன்னாலே 'அவுட்' என்று அவன் வழக்கம்போல் கத்த 'நாயே, செருப்பு பிஞ்சிரும்.நல்லா பாரு கோட்டுக்குள்ளேதான் விழுந்துருக்குன்னு' நான் கட்டை தொண்டையில் திரும்ப கத்திய போது என்னை ஒரு மாதிரியா பார்த்துட்டு 'ஆமாம்'ன்னு ஒத்துக்கிட்டான். பெட்டி வேலை செய்வதை என்னால் உணர முடிந்தது. அதிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம். இப்பெல்லாம் இரவு நேரங்களில் பேன்ட் பையிலிருந்த பெட்டியை இருகப்பற்றிகொண்டு சுடுகாடுகளைக் கடந்து விடுவேன். முக்கியாமான விஷயம், சுடுகாடுகளை பார்த்துகொண்டே கடக்கவும் தைரியம் வந்தது.

இப்ப வெளியே போனால் செல் போனை தேடுவோமே, அது மாதிரி வெல்வெட்டை தேட ஆரம்பித்தது மனசு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பெட்டி இல்லாமலே வெளியே போக பழக ஆரம்பித்தது. என்ன ஒரு தைரியமுன்னா ,பவரான பெட்டி வீட்டில் இருந்தாலும் காப்பாற்றத்தானே செய்யும் என்ற நம்பிக்கையில். அப்புறம் காலத்திற்குத்தான் யாருட்டையும் சொல்லிட்டு போகணும்ன்னு ஒரு விவஸ்தை இல்லியே. உருண்டு....ஓடி.......போயிருச்சு.

அம்மாவுக்கு எழுவது வயதிருக்கும். அவரது தகப்பன் போன்ற மாமனாரின் வெத்தலை உலக்கையை வைத்து இடித்து வீட்டில் வெத்தலை போட்டுகொண்டிருந்தது. நான் சாமி கும்பிட்டு கொண்டிருந்தேன். சாமி படத்திற்கு பக்கத்தில் இத்து போன கருப்பு கயிறுகளுடன் அதே வெல்வெட் பெட்டி. அதைத் தொட்டு கும்பிடும் பொழுது தவறி விழுந்து பெட்டி திறந்து கொண்டது. உள்ளே சின்னதா ஒடைந்த கண்ணாடி சில்லு. 'என்னம்மா இதுன்னு' நான் கேட்ட போது அப்பா இறந்த பின்னர் கெக்கை போட்டு கடகாப்பல்லு இருந்த இடம் தெரிய அம்மா சிரித்ததை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. உங்கப்பா கல்யாணமாகி முத முதல்லே வாங்கி கொடுத்த தோடு இருந்த பெட்டிப்பா. அது உங்க அப்பாவோட உடைந்த கண்ணாடிப்பா'.


அம்மா இறந்த ஏழு வருஷம் கழித்து ரிட்டயர் ஆயி சிவனேன்னு வீட்டில் இருந்த போது அமெரிக்கா வந்துதான் ஆகனும்ன்னு பிளைட் டிக்கெட் வாங்கி பையன் அனுப்பிய போது தட்ட முடியவில்லை. பைக்கில்பின்னால் உட்கார்ந்து போகவே பயப்புடும் நான் பிளைட்டில் செல்ல வெல்வெட்டு பெட்டிக்குபதிலாக கூட எடுத்து வந்தது 'காயத்ரி மந்திரமும்''ராம ஜெயமும்தான்'.

Thursday, June 18, 2009

ஆறாவது.....



அமெரிக்க குளத்தருகே,
வெள்ளைநிற வாத்தொன்று,
விகற்பமின்றி உடன் நிற்கும் காக்கையும் கூட.
என்னமோ சொல்லியது வாத்து
விர்ரென்று பறந்தது காக்கை
விரும்பி கொத்திய மீனோடு.
வாத்தும் சிறிது வழி விட்டு ஒதுங்கியது.
என்ன எழவு சொல்லியிருக்கும் வாத்து?

என்ன புரிந்திருக்கும் எழவெடுத்த காக்கைக்கு?
மனம் என்னிடம் மறுகி....மறுகி....கேட்டது.
"ஆறாவது.... இருந்தால்தானே நாம்
நிறபேதம்.... இனபேதம் பார்ப்பதற்கு,
லிங்கன் வாத்தும் லூதர் காக்காயும்
அவதரிக்க அவசியமா நமக்கு,
குறையக் குறைய கூடி வாழ்வோம் நாம்,
கூடக் கூட குத்து வெட்டுத்தான்,
குண்டுமழையும்தான் ...."

சொல்லி இருக்குமோ வாத்து?
சொல்லி இருக்கலாம்தானே?.....

Tuesday, June 16, 2009

வீர பாண்டிய கட்டபொம்மன்,நான் மற்றும் மோகன்

1959 ஆம் வருடம்தான்னு நினைக்கிறேன்.வீர பாண்டிய கட்டபொம்மன் படம் வந்தது.நாலாவதோ ஐந்தாவதோ படிக்கிறேன். சிவகங்கை ஸ்ரீராம் தியேட்டரில் பார்த்தது. தியேட்டர் முதல்கொண்டு சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா.எங்க ஊரிலே அது ஒன்னுதான் தியேட்டர்.

கட்டபொம்மன்னு சொன்னாலே மோகனும் சேர்ந்து வந்துருவான். பிரியமான முதல் நண்பன், அப்புறம் உறவினன். கட்ட பொம்மன் படம் நேற்று வந்தது போல் இருக்கிறது. சிவாஜி கணேசனுக்கு நடிப்பிற்க்காக முதல் அவார்ட் வாங்க்கிகொடுத்த படம். அதுவும் உலகளவில். கெய்ரோவில் நடந்த பட விழாவில் கொடுக்கப்பட்டது.

"உம்....நீர்தான் வீரபாண்டிய கட்டபொம்மனோ!
"உம் ...நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ!
"ஏது இவ்வளவு தூரம் .......
"நட்பு நாடியது ....அதனால் யாம் வந்தோம்....
"உன் மீது குற்றம் சுமத்துகிறேன்...
"என்னவென்று .......
"எடுத்துரைத்தால் கணக்கிலடங்காது...
"எண்ணிக்கிகை தெரியாத குற்றம் .....
"எனக்கா எண்ணிக்கை தெரியாது....சொல்கிறேன் கேள்...
வரி செலுத்தவில்லை, நீண்ட காலமாக வட்டியும் செலுத்தவில்லை .....கிஸ்தியும்
செலுத்தவில்லை.....

"வரி....வட்டி....கிஸ்தி. யாரைக்கேட்கிறாய் வரி! எதற்கு கேட்கிறாய் வட்டி! எங்களோடு வயலுக்கு வந்தாயா!நாற்று நட்டாயா!களை பறித்தாயா!ஏற்றம் இறைத்து நெடு வயல் பாயக்கண்டாயா! அங்கே கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்தாயா! அல்லது மாமனா மச்சானா!"

இதிலே ஒன்னு ரெண்டு வார்த்தைகள் முன்னை பின்னை இருக்கலாம். ஓரளவு சரியா இருக்கும். இதை எழுதிக்கிட்டு இருக்கும்போதே கட்ட பொம்மன், நம்ம சிவாஜி சார் மீசையை மேல் நோக்கி முறுக்கிக்கிட்டு தோள் மேல் கையைப்போடுகிறார். நேத்து பார்த்த படத்தோட வசனம் ஏதாவது ஞாபகத்திற்கு வருதா பாருங்க; வராது, காரணம் சிவாஜிங்க!நடிக்கிறதுக்குன்னே பிறந்த மனுஷன். ஏறத்தாழ ஐம்பது வருசமா நெஞ்சிலே போட்ட வார்த்தைகளை அந்த மனுசனோட நடிப்பு நிறுத்தி வைக்குதுனா பாருங்களேன்.

ஐந்தாவது படிக்கும் போது ஆரம்பித்தது. நான் கட்ட பொம்மன் பார்ட்லையும் மோகன் ஜாக்சன் துரை பார்ட்லையும் நடிப்போம். அப்ப இருந்த பெருசுகளுக்கெல்லாம் நாங்க ஒரு பொழுது போக்கு. மங்கலம், மதுரை, சிவகங்கை இங்கெல்லாம் லீவுக்கு செல்லும் போது எங்க கொடி பறந்தது. கொஞ்ச நாளில் எனக்கும் அவனுக்கும் பிரச்சனை வந்தது. தான் கட்டபொம்மனாக நடிப்பதாக சொல்லும் போது நிர்தாட்சியமா மறுத்துவிட்டேன் நான். பல தடவை கேட்டான். பலதடவையும் மறுத்து விட்டேன், கட்டபொம்மன் கண்கள் கொப்பளிக்க வசனம் பேசும் போது, திரும்ப கோபத்தோடு பேச வேண்டிய ஜாக்சன் துரை ஏக்கமாக பேசுவார். "ஒரே ஒரு தடவைடா...." என்று பலமுறை கேட்டும் நான் ஒத்துகொள்ளவே இல்லை. என் இமேஜ் போய் விடும் என்ற பயம் எனக்கு. மேலும் அவன் எனக்கு கொஞ்சம் பயந்தவன். அதனால் எப்ப கூப்பிட்டாலும் நடிக்க வந்து விடுவான். ஆனால் ஒவ்வொரு முறையும் "ஒரே ஒரு தடவைடா..."என்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. ஐந்தாவதில் ஆரம்பித்தது ஒன்பதாவது வரை கேட்டுகொண்டிருந்தான், கடைசியில் நடிப்பதை நிறுத்திகொண்டோமே தவிர அவன் கோரிக்கை நிறைவேறவே இல்லை.

1978 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை காலை கடலை மிட்டாய் தின்றுகொண்டே கொடைக்கானல் தற்கொலைப்பாறையிலிருந்து குதித்து மோகன் தற்கொலை செய்துகொண்ட பின்னர் யாரவது கட்டபொம்மனை பற்றி பேசினால் கண்களில் நீர் கொப்பளிக்க விலகி சென்று விடுவேன். 30 வருசத்திற்கு மேல் அவனை நினைத்து சனிக்கிழமைதோறும் வைராக்கியமாக விரதம் இருக்க பழகிக்கொண்ட இந்த சனியன் புடிச்ச மனது ஒரே ஒரு தடவை அனுமதிக்க மறுத்துவிட்டது. மனது போன்று மனிதனை கொடுமை படுத்தக்கூடிய ஒன்று உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. இல்லீங்களா?

Saturday, June 6, 2009

ஆசை

"ஆசையை விட்டொழி!"-புத்தர்
"அனைத்துக்கும் ஆசைப்படு!"-அறிவு ஜீவிகள்
அம்மொழி ஆண் என்றால் இம்மொழி பெண்தானே !
ஒன்றுக்கொன்று எதிர்மறையாக!
அதுமில்லாமல்,இதுவுமில்லாமல் திருநங்கையாக
இருக்கவே தீர்வு செய்தேன் முடிவாக!
ஆம்!அளவோடல்ல......அளவறிந்து ஆசைப்பட!

Thursday, June 4, 2009

புதிய அனுபவமும்! விபரீதமான கற்பனையும்!

"என்னலே! எப்படி இருக்கே.....சொல்லாம கில்லாம போய்ட்டியேலே..... அமெரிக்கா எப்படிலே இருக்கு!"-திருநெல்வேலியிலிருந்து என் ஆத்மார்ந்த நண்பன்.
"மூதேவி! உன்ட்ட போன்லே சொன்னேனே! மறந்துட்டியாடா மாப்பு!" -இது மதுரைக்காரனான நான்.
"ரிட்டயர்ட் ஆனதும் நம்ம செட்டுலை முதல்லே அமெரிக்கா போனது நீந்தான்லே! அமெரிக்கா எப்படிலே இருக்கு? அமெரிக்காவில் பொல்லூசனே(Pollution) இருக்காதாம்லே?”
"இருக்காது. இருந்தாலும் ஒன்னும் பண்ணாது."
"என்னலே சொல்லுதே! கொஞ்சம் விளங்கிற மாதிரி சொல்லுலே?"
நான் போன் போட்டதாலே அவனுக்கு வைக்க மனசில்லை.
"ரோட்லே மனுசங்களையும் பார்க்க முடியாது.சைடுலே மண்ணையும் பார்க்க முடியாது. மணலையும் பார்க்க முடியாது."
"என்னலே சொல்லுதே! அதை வச்சுதானடே இங்கை பல பேர் கோடிஸ்வர பயலயிட்டாங்கே! மனுசங்களை பார்க்க முடியாதா?"
"ஆமாம். இருந்தா கண்ணாடியை மூடிக்கிட்டு காருக்குள்ளே இருப்பாய்ங்க. இல்லாட்டி கதவை மூடிக்கிட்டு வீட்டுக்குள்ளே இருப்பாய்ங்க. மண்ணு, மணலுன்னு இருந்தாத்தானே காற்றுன்னு அடிச்சா தூசின்னு ஒன்னு பறக்கும். எல்லாத்தையும் புல்லை போட்டு மூடிட்டா? தூசியாவது.. கீசியாவது அப்படியே தப்பிதவறிய ஒன்னு,
ரெண்டு தூசியும் காருக்குள்ளேயும், வீட்டுக்குள்
ளேயும் இருக்கிறவைங்களை என்னடா பண்ண முடியும்,
பாவம்! பொல்லூசன்னு இல்லை, அதுக்கு ஆத்தா அப்பத்தா கூட ஒன்னும் பண்ண முடியாது.
"
"வீடு கட்டுவாயின்கில்ல? ரோடு போடுவாயின்கில்ல?"
நான் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. வடிவேல் மாதிரி கேள்வி மேல் கேள்வி. தவிர நாங்கள் ரெண்டு பேரும் ஹைவேஸில் வேலை பார்த்தவர்கள்.
"அப்பெல்லாம் பெரிய வலையையோ, தார்ப்பாயையோ போட்டு மூடி நம்ம மார்கழி மாசத்திலே தூங்குவமே, அது மாதிரிமண்ணையும் மணலையும் தூங்க வச்சிருவாங்கே."
"என்னலே! என்னாலே நம்பவே முடியளிலே."
"இன்னும் ஒரு விஷயம். சொன்னா சத்தியமா நீ நம்பவே மாட்டே! என் மகன் இருக்கும் வீட்டில் பின் பக்கமாக 6 அடிக்கு 7 அடி வெறும் கண்ணாடி கதவு.நம்ம ஊரு ஓமக்குச்சி கூட சுண்டு விரலாலேயே ஒடைச்சிக்கிட்டு
உள்ள வந்தர்லாம்."

"பயமே இல்லயாலே?"
"ஒரு பயமும் இல்லை."
[அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. வந்த புதிதில் இரவில் அரை மணிக்கு ஒரு தடவை எந்திரிப்பதும், கண்ணாடி கதவை வெறித்து பார்ப்பதும் பின் வந்து படுப்பதுமாய் இருந்த என் நிலை. காரில் வெளியில் செல்லும் போது, எவ்வளவு வேகமாக சென்றாலும் எப்படியாவது எல்லாவீடுகளின் பின் பக்க கதவுகளையும் பார்த்துவிடுவேன். ஒரு நூறு, இருநூறு வீடுகளில் கண்ணாடி கதவுகளை பார்த்த பின்னர்தான் மனசு ஒரு நிலைக்கு வந்தது.]
"அமெரிக்கா நான் வரவே முடியாதுன்னு அடிச்சு விட்ர்யாலே?"-----------------
ஆம்! அவனால் நம்பத்தான் முடியவில்லை. எப்பவாவது அமெரிக்கா வந்தால் அவனும் நம்புவான்.
லாரல், ஹார்டி படம் பார்த்திருக்கீர்களா? பேசும் படம் வருவதற்கு முன்னாள் வந்தது. 1900 லிருந்து 1930 க்குள் இருக்கும். இங்கு வீட்டுக்குள்ளேயே இருப்பதால் போர் அடித்து, சி.டியில் பார்த்தேன்.
நகைச்சுவையில் என் மனம் ஆழ வில்லை. அப்ப இருந்த வீடு, காரு, ரோடோட சைடு--- கூர்ந்து பார்த்தேன். அப்பவே ரோட்டில் சென்ட்ரல் லைன் தெரிகிறது. பக்கத்தில் ட்ரெயில்(trail) தெரிகிறது, புல்வெளி
தெரிகிறது.
ஆக! அதற்கும் முன்னாள் எப்பொழுதோ எவன் மனதிலோ தோன்றிய ஒரு சிறிய பொறி பெரிதாகி, பெரிதாகி, எங்கும் வியாபித்து அமெரிக்கா முழுவதும் புல்லை வளர்க்க வேண்டும் என்ற விஸ்வரூப எண்ணத்தை தோற்றுவித்து இன்று எங்காவது 3 இஞ்சுக்கு மேல் இருந்தால் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும் என்ற ஒழுங்கு வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
ஏதோ ஒரு வகையில் சட்டத்தை மதிப்பதற்கோ, இல்லை பயப்படுவதற்கோ அமெரிக்கா மக்களை ஒருவரோ, இருவரோ அல்லது பலபேரோ ஒரு வருடத்திலோ, இருவருடத்திலோ அல்லது பல வருடங்களிலோ மாற்றி இருக்கிறார்கள்; மாற்ற முடிந்திருக்கிறது.
"இது எப்படிடா முடிந்தது?"-என் மகனை கேட்டேன்.
"ரொம்ப சிம்பிள் அப்பா! நிர்வாணமா மதுரையில் கோரிப்பாளையத்தில் நடந்துட்டு வாங்கன்னா, நடப்பீங்களா? மாட்டீங்க. சின்ன வயசிலேயே அது 'ஆயி' 'கக்கா' என்ற பல்வேறு வார்த்தைகளில், முறைகளில் சில சமயங்களில் அடித்தும் அது ரொம்ப அசிங்கமான விசயம்ன்னு உங்க அடி மனதில்அப்பா, அம்மா, சுற்றி இருப்பவர்கள் பதிய வைத்துள்ளார்கள். இங்கு பல அரசியல் வாதிகளும், பொது
நல வாதிகளும் அப்பாக்களாகவும், அம்மாக்களாகவும் இருந்து சட்டத்தை மதிக்காமல் இருப்பது ரொம்ப அசிங்கமான விசயம்ன்னு நாலைந்து ஜெனரேசனுக்கு முன்னாலேயே அடிமனதில் பதிய வைத்து சென்று விட்டார்கள். நம்ம ஊரில் அப்படி சொல்லவும் ஆள் இல்லை, அடிக்கவும் ஆள் இல்லை."
வாஸ்தவம்தான். நம்ம ஊரில் யாராவது வருவாய்ங்களா? ஏக்கமாக இருக்கிறது! உடனே நாங்க கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி; அவைங்க கலாசாரம் என்ன; நம்ம கலாசாரம் என்ன. அப்படியாக்கும் இப்படியாக்கும்ன்னு தாண்டி குதிச்சு தண்ணியிலை விழ வேண்டாம். நல்லதை மட்டும் பார்க்கலாம்தானே.

ஏக்கத்தோடு லேசா ஒரு எண்ணமும் வந்தது. ஊருக்கு போய் வீட்டுக்கு முன்னால் சும்மா கிடக்கும் இடத்தில் புல் வளர்ப்போமேன்னு.
கூடவே அனிச்சை செயலாக விபரீத கற்பனையும் வந்தது. நான் புல்லு வளர்க்க........பக்கத்து வீட்டுக்காரன் அதுக்கின்னே ரெண்டு மாடு வளர்க்க.....மாடு வந்து புல்லை மேய....நான் போய் அவனை அதட்ட....அவன் சொன்ன அந்த ஏழு வார்த்தைகள் என்னை நிலை குலைய வைத்தது. அருவாளை எடுத்து வெட்ட வந்திருந்தால் கூட அப்படி பயப்பிட்டிருக்க மாட்டேன். வேறொன்றுமில்லை அவன் சொன்னது. "நான் மாவட்டத்துக்கு ரொம்ப வேண்டியவன், பேசாம பொத்திக்கிட்டு போயிடு."

Tuesday, June 2, 2009

தியானம்


வெட்டவெளி பொட்டல்......
இரவின் நிசப்தம்..........
அணைக்க விருப்பமா இல்லையா என்பது
தெரியக்கூடாமலே லேசாக வருடும் காற்று!
பாரதி சொன்ன மாதிரி பத்து பன்னெண்டு தென்னை மரங்கள்!
எங்கோ சல சலத்து நிசப்தத்தை முறைக்கும் நீரோடை!
"நானும் முழித்துதான் இருக்கிறேன்"-குக்கூவிடும் குருவியின் குசும்பு!
"எல்லாவற்றையும் 'ஏக் தம்மில்' வெள்ளியாக மாற்றுகிறேன் பார்"
பௌர்ணமி சந்திரனின் பகீரத பிரயத்தனங்கள் !
"முகர்ந்து பார்க்க காசா கேட்கிறேன்"-முனங்கிடும் பூக்கள்
இவை எல்லாம் நோக்கவோ, நுகரவோ
நேரமில்லையாம் மனசுக்கு!
ஐந்நூறு, ஆயிரம் கட்டி தலைப்பா சாமியார்களும், தாடிசாமியார்களும்
நடத்தும் 'தியான' வகுப்புகளை தேடி அலைகிறது திமிரெடுத்த மனசு!

கருணை

மரம் ஒன்று நிழல் கொடுத்தது மௌனமாக!
சலனமோ, சஞ்சலமோ ஏதுமின்றி தீர்க்கமாக!
ஒரு கிளையை காலையில் வெட்டி
மறு கிளையை மதியத்திற்கு மேல் வெட்ட
களைப்பாறும் மனிதனுக்காக!

தவம்

தவம் என்பது யாதென உணர கானகம் சென்றேன்!
ஞானிகள் பலர் நவின்றதை நம்பி
காலைமடக்கி ஆசனம் போட்டு
கையை மடக்கி சின் முத்திரை இட்டு
கடுந்தவம் புரிந்தேன்!

கடைசியில் கடவுள் தோன்றினார்!
கடுந்தவம் புரிய காரணம் யாதென
கடவுள் வினவ,வீட்டிற்கு அவரை விருந்துண்ண
அழைத்தேன்.விலாசம் கேட்டார்!

கடமை தவறாத கண்ணியம் மிக்க காவலர் பெயரைச் சொல்லி
அவர் வீட்டிற்கு அடுத்த வீடு என்றேன்!
"அவர் வீட்டு எச்சில் சோற்றால்தானே இன்னும் வாழ்கிறேன்!
இன்னும் வாழ்வேன்! பசித்தால் புசிப்பதற்கு வேறெங்கும் செல்ல
நான் விரும்புவதில்லை" கடவுள் கூறி கனத்தில் மறைந்தார்.

தவம் என்பது யாதென உணர்ந்தேன்!
என் தவற்றையும் உணர்ந்தேன்!