Monday, August 17, 2009

தொடக்கப்பள்ளி


கருவேல நிழலில், பதிவர் பா.ரா. ஒரு தொடக்கப்பள்ளியின் படத்தை வெளியிட்டு, அதற்கு ஒரு கவிதையும் எழுதக் கேட்டிருந்தார். என்னாலான ஒரு முயற்சி கீழே... [படம் - கருவேல நிழல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது. உபயோகப்படுத்த அனுமதித்த பா.ரா. அவருக்கு நன்றிகள்!]

புளியங்கொட்டையில்
ஒன்னயும் ரெண்டையும்...
உயிரையும் மெய்யையும்..
உண்டாக்கி காட்டிய..
புஷ்பவள்ளி டீச்சரிலிருந்து..
'சிவகாசி செல்வராசு வாத்தி...
சீதா லட்சுமி..
முத்து லட்சமி..
ஐந்தாவதில் சொல்லவைத்து
இருபது வயது வரை..
'இயேசு அறிய..'
உண்மை சொல்லும் போதெல்லாம்
சொல்ல வைத்த...
ஞானப்பிரகாசம்...
காதல் மன்னன் கதிர்வேலு...
கூத்தான்டான் குரங்கு வாத்தி..
"என் சிந்தை நோயும் தீருமோ"
மறக்கவே முடியாத...மருதகாசி
பாட்டு மெட்டில்....
"மேலான தெய்வம் தாயடா..
உண்மைக் கோவில் அவளடா..
பாராட்டினாள் சீராட்டினாள்..
உண்மை அன்பை ஊட்டினாள்..."
பாட்டமைத்து..நாடகம் நடத்தி
பாதியிலே..பறந்து சென்ற ஜான் வாத்தி..
சுடுமூஞ்சி..சுப்பய்யா...
ஒல்லி வாத்தி...உலகநாதன்..
கம்யூனிஸ்ட் ஷண்முகம்...
"சட்டிப்பீ..தின்பே..
ஓ வாயிலே..தர்ப்பைப்
புல்லை போட்டு பொசுக்க"
பதில் வராத போதெல்லாம்..
பண்புடன் சொல்லும் ராமுடு..
"அடுத்தவனைக் கெடுத்தவன்.."
வருகைப் பதிவேட்டை..
வாசிக்கும்போது..
அடுத்த பெயரை..அழைக்க..
அழகுடன்..வாசிக்கும்...
ஆரோக்கிய சாமி...
வழுக்கை தலை..வருதுடோ..
சூனாக்கீனா..சு.கிருஷ்ணமூர்த்தி...
அழகான ஹிந்தி டீச்சர்...
(பெயர்..எப்படி மறந்தேன்)
அனுமார் கோவிலில் சந்தித்து
அம்பலமான கிசு கிசுவில்..
அகப்பட்ட 7E...ரங்கராஜன்...
தொந்தி ஜெயராமன்...
ஒயிட் அன்ட் ஒயிட்..
பாஸ்கர சேதுபதி...
தஸ் புஷ்..தஸ்தகீர்..
சீனியாரிடி செய்த வினையால்
பிசிகல் டைரெக்டர் ஆன..
ஓமக்குச்சி சைஸ்
'பயில்வான்' ஆறுமுகம்..
'மண்ணாங்கட்டி'மரியஜெகம்...
'நீக்ரோ'நீலமேகம்...
'கிட்டி'கிருஷ்ணமூர்த்தி..
'மொரட்டு'முத்துக் குமார்..
'கலாட்டா' கருப்பையா
ஆசிரியராக அறிமுகமாகி...
திறமையால்..மேஜராகி
சைனாப் போரில் காலமாகி...
மறக்கவே முடியாத..
'வெள்ளை' சே ஷாத்ரி
'செவிட்டு' சே ஷாத்ரி
மோதிரத்தை திருப்பி வைத்தாலே...
அரை வாங்க தயார்நிலையில்..
'கரடி'சே ஷாத்ரி....
"ஹாரப்பாவைப் பாரப்பா..
நாகரீகத்திற்கு முன்னோடி..
நாங்கப்பா..மறுக்க முடியுமா..
'உலக' ப்பா...."
சரித்திரம் நடத்தும்போது
சிதறிவிட்ட...'குட்டை' நாகராஜன்...
'வானம்பாடி' படத்தை..பார்த்து
'கங்கைகரைத்..தோட்டத்தை'
கட்டைக்குரலில் பாடி...
கதறடித்த..மொக்கைப் பிச்சை..
ஆறு பிள்ளைகள் அடுத்தடுத்து
'அஞ்சலியாகப்' பிறந்தாலும்
காவி வேட்டி...தும்பைப் பூ சட்டை
துவைக்க மட்டுமே முடிந்த ...
தூய்மையான ..அங்கவஸ்திரம்..
துயரம்..தெரியாமல்..
தொங்கியே நிற்கும் தூய்மையான
புன்சிரிப்பு..தகர்க்கவே முடியாத
தட்சிணா மூர்த்தி புலவர்...
"என் மாதிரி இருப்பாரா
பாரதிதாசன்?"
பட்டை மீசையுடன்
புரியாத பார்வையுடன்
புலவர் இளங்கோ..
தனக்கும் புரியாமால்..
எங்களுக்கும்..புரியாமால்
கணக்கெடுத்து..பதற வைத்த
கட்டைக் குரல் பழனி...
பொறுக்க முடியாமால்...போராடி
மாற்றி...அல்ஜீப்ராவை...அறிய
வைத்த...சம்மர் கிராப் சந்திர சேகர்...
"என்னப்பா..எப்படி இருக்கே.."
தொண்ணுத்தெட்டு வயதிலும்...
தொய்வறியா நெட்டை
வரதராஜக் கோன்....
"தெள்ளிய தேனில்..
சிறிதொரு நஞ்சையும்...
சேர்த்த பின் தேனாமோ!
நன்னெஞ்சே!
சேர்த்த பின் தேனாமோ?"
பாரதியே வந்து நின்னு...
கடவுளை வாழ்த்தும்..
கோட்டு வேட்டி...
கண்ணுசாமி....
"தொண்டான்" என்றாலே...
தொடையெல்லாம்..
நடு நடுங்கும்....
வெங்கலக் குரலுடையோன்
வெட வெடத்த
வெங்கடகிருஷ்ணன்
காலை மாலை..கணீர் குரலில்
தங்கத் தமிழை பன்னீராக
வெளியே தெளித்து
ஆறுமணிக்கு..தண்ணியை..
உள்ளே தெளித்து..
சிவன்கோவில் வாசலிலே..
உள்ளே போனால் ஆச்சாரம்
போய் விடுமாம்...
'தண்ணி'வாசம்...சாமிக்கு..
தெரிஞ்சுடுமாம்....
கழுத்தில் கலர் கலர் துண்டுடன்..
கர்நாடக இசையில்...
கலங்கடிக்கும் வேதைய்யா...
கோல்ட் பிளேக் சிகரெட்டை..
அரைமணிக்கு ஒன்றாக..
அடிக்கின்ற..அனந்தகிருஷ்ணன்..
மலங்க..மலங்க முழிப்பதால்
'மலங்கன்'மதனகோபால்
கதை சொல்ல மாட்டாரா...
காலமெல்லாம்...
ஏங்கவைத்த ராமைய்யா
"தண்ணியில்லாமல் நெல்லு வெலைய
வழியொன்று காண வேணும்..
அப்பவே சொன்ன.....
அய்யா மாதிரி....
கையடக்கப் பெட்டியில்....
கனதூரம்...பேசவேணும்..."
காணும் போதெல்லாம்
சொல்லும்....
வெள்ளைக் கோட்டு சூட்டு...
வெங்காயப் பிரியனான..
பெரியாரின் பிரியன்...
நல்லதைத்தவிர வேறொன்றும் அறியா..
தலைமை வாத்தி...
நாராயணன் சேர்வை...
தொலைக்க முடியாத பெயர்கள்..
தொடக்கப் பள்ளி என்றதும்....
பள்ளி இறுதிவரை...
தொடர்ந்து....
நினைவில் வந்து.....
தூக்கத்தை
தொலைத்த பெயர்கள்.............................................
வாசலில் என்ன சத்தம்.....
ஓ! வந்தது நீதானா!
எத்தனை முறை...
சொல்வதுனக்கு...
வேண்டாம் வேண்டாம் என்றால்...
விளங்காதா உனக்கு.....
மறுபடியும்..சொல்கிறேன் கேள்...
மடி நிறைய பணம்.... வேண்டாம்...
மாட மாளிகை............ வேண்டாம்...
கூட கோபுரம்..............வேண்டாம்..
மனைவி மக்கள் ........வேண்டாம்...
மறுபடியும் என்னை...
ஒரு முறை...
ஒரே ஒருமுறை.... இவர்களுக்கு..
மாணவனாக்க முடியுமா....
சொல்...
முடியுமென்றால்....
காணிக்கை பேரம்....கலந்து பேசி
முடிவு செய்வோம்.....
முடியாதென்றால்....
வாசலில் நின்று
வம்பேதும்...பண்ணாதே....
வெளியில்....
வேலையிருக்கு...
சற்றே...விலகி ...நில்
சர்வேசா!

11 comments:

பா.ராஜாராம் said...

பிரியங்கள் நிறைந்த என் சித்தப்பா,"தொடக்க பள்ளியின்" ஆக சிறந்த வெளிப்பாடு இது.கருவை உள் வாங்கி ஊற போட்டு பிறகு பிளிர்கிறது உங்கள் "பே யானை" எவ்வளவு ஞாபகங்கள்.எவ்வளுவு பெயர்கள்.இவர்களில் நிறைய எனக்கும் ஆசிரியர்கள்.என் வரையில் அதே அடை பெயர்களுடன்.சாம்பத்யம் வேறு எதிலும் இல்லை சித்தப்பா.இந்த மாதிரி,நினைவும் இவ்வளவு வெளிப்பாடும்.நமக்கு,கவிதைகள் போலவே நம் கடமைகளும்.இதில் எந்த தராசும் ஏற்றி இறக்க முடியாதுதான்.இதில் தாமதபட்டது நம் எழுத்து என்று எடுத்து கொண்டு மீண்டும் பதிய தருவோம்.வாழ்வை,நம்மை,நம் நினைவுகளை!வாழ்த்தும் அன்பும் சித்தப்பா..

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றி ராஜா

ஹேமா said...

சித்தப்பா (சொல்லலாம்தானே) சுகம்தானே.

நிறைவான நினைவலைகள்.இவ்வளவு ஞாபகமா பெயர்களெல்லாம் மனசில வச்சிருக்கீங்க.உங்க நண்பர்கள் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்.
அவ்வளவு நினவின் வரிகள்.சில இடங்களில் கொஞ்சம் வலியும்.காலங்கள் மீண்டும் திரும்பினால்...!

சுகமா இருங்க சித்தப்பா.இன்னும் எழுதணும் நிறைய.

நேசமித்ரன் said...

இந்தப் பயிலரங்கு முயற்சியின் ஆகச் சிறந்த கவிதை இதுவே இதுவே இதுவே !
பால்யத்தின் பச்சயம் மாறாத சொற்கள் .டில்லி இரும்புத்தூண் மாதிரி துரு ஏறாத சரித்திரம் .தூக்கனாங்குருவிக் கூட்டில் சிக்கிக் கிடக்கும் ஒற்றை சிறகு சொல்லும் கதை . கூத்து மேளத்தில் ஏறி இருக்கும் கருமை பேசும் இசை மொழி .

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றி மகளே!

நன்றி நேசா!

kathirvelmuniyammal said...

முக்கியமான மூனாக் கீனா முத்துக்கிருஷ்ணன்,அன்பான ஆர்.எம்.கே,
'பௌ டை'கணக்கு வாத்தி கணபதி,'குடுமி'...பெயர் மறந்து போச்சு
மறந்திட்டியே...'அம்பலம்'அண்ணாதுரை....என்னை ஞாபகம் இருக்கா?

அண்ணாதுரை சிவசாமி said...

எப்படி இருக்கிறாய் கதிர்வேல்!
பார்க்க முடியாத தூரத்தில் இருக்கும் போது.... பழைய பள்ளி நண்பன்...
கிடைத்ததும்......வந்ததும் .....
என்ன சொல்ல...நண்பா?பொழுது போக்கிற்காக அமெரிக்கா வந்தேன்...
பொழுதைப் போக்குவதற்காக எழுதி கொண்டிருக்கிறேன்!எனது ஆத்ம
திருப்திக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்.எனது பட்டப் பெயரோடு
அழைத்திருப்பது...பள்ளி ஞாபகத்தை...திரும்பவும்...திரும்பவும் நினைக்கச்
சொல்கிறது. நீ எப்பொழுது ஊர் திரும்புகிறாய்?ராஜாராம் ...அண்ணன் பையன்
உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.60 வயதிற்கு மேல் தட்டுதடுமாறி
'பிளாக்' ஆரம்பித்தவர்கள் நம் இவராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி நண்பா!போனில் தொடருவோம்....

தேவன் மாயம் said...

என்ன ஒரு ஞாபக சக்தி!!! அருமைங்க!!நீங்கள் மதுரையா? நான் காரைக்குடிதான்!!!!

அண்ணாதுரை சிவசாமி said...

நன்றி தேவன்மாயம்.
நான் மதுரைதான் பூர்வீகம்.கதிர்வேலுக்கு சிவகங்கைக்கு
பக்கத்தில் சக்கந்தி.

Ramamoorthy said...

எழுத்தாளர் கி.ரா அவர்கள் கரிசல் மண்ணின் வாசனையை எழுத்தில் வடித்தார்.
பாரதிராஜா அதே மண்வாசனையை தன் படங்களில் பதிவு செய்தார்.
இங்கே எங்கள் சிவகங்கையின் செம்மண் இலக்கியம் படைக்க என் இனிய அத்தான் அவர்களும், அன்பு மாப்பிள்ளையும் போட்டி போடுகிறார்கள்.
வாழ்க அவர்களின் இந்த எழுத்து வளர்ச்சி.
வளர்க அவர்களின் படைப்பு முயற்சி.
குறிப்பு: வலை தளங்களை வாழ்க்கை பதிவுகளுடன் நிறுத்தி விடாமல் ஏனைய விஷயங்களிலும் தங்கள் சிந்தனை சிறகுகளை விரித்து விடுங்கள்.
தங்களின் வலை தளத்துக்குள் தங்கள் அனுமதியின்றி நுழையும்.
மூர்த்தி
(மதி,காயத்ரி மூலமாக அறிந்து)

அண்ணாதுரை சிவசாமி said...

ரொம்ப..ரொம்ப..சந்தோசமா...இருக்குத்தான்..உங்கள் வருகையும் எழுத்தும்.என் வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்தது புத்தகங்களோடுதான்.ஆனா ஒரு வரி கூட அமெரிக்கா வர்ர வரைக்கும்
எழுதியதில்லை.இங்கு ஓய்வு சாஸ்தி.மனது வழிந்தோடுவதற்கு ஒரு வழி தேடி அலைந்தது.
அதுக்கு பிடித்தமான இந்த..வழி ..நம் கண்ணன் மூலமும்..நண்பர் மூலமும்..காட்டப் பட்டதும்
சரியோ..தவறோ..அது வழியே..போய்க்கொண்டிருக்கிறது.உங்க ஆலோசனைக்கு ரொம்ப நன்றி.
உங்கள் பின்னூட்டத்தை இப்பொழுதுதான் பார்த்தேன்.பிளாக்கில் எழுதுவதற்கும்,வருகை புரிவதற்கும்
பாராட்டியோ திட்டியோ எழுதுவதற்கும் யாருடைய அனுமதியும் தேவை இல்லை,அத்தான்.என் தளத்திற்கு
நீங்கள் அடிக்கடி வர வேண்டும்.கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டும்.ராஜா,மிக உயரத்திற்குப் போய் விட்டான் அவனுடைய தளத்திற்குப் போனீர்களா?

Post a Comment